ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையின் போது ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் மலையில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.
இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் பஹல்காம் பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் உள்ள உதாம்பூர் மாவட்டம் பாசன்கார்க் என்ற பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு நடந்த துப்பாக்கிச் சண்டையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.