Wednesday, June 25, 2025
Home செய்திகள்Showinpage ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்பில் உயர்கல்வி பயில சென்ற தமிழக மாணவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்ததற்காக மாணவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்பில் உயர்கல்வி பயில சென்ற தமிழக மாணவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்ததற்காக மாணவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

by MuthuKumar

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆப்ரேசன் சிந்தூர் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயர்கல்வி பயில சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு திரும்ப இயலாத நிலையில், துரித நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்ததற்காக அம்மாணவ, மாணவியர் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

கடந்த 22.04.2025 அன்று ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசாரான் பள்ளத்தாக்குப் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்று தமிழ்நாடு திரும்ப இயலாமல் சிக்கித் தவித்த 154 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியினால் பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்து வரப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆப்ரேசன் சிந்தூர் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், பட்டுவளர்ப்பு, ஆடைவடிவமைப்பு (NIFT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT) உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ மாணவிகள் தமிழ்நாடு திரும்ப இயலாமல் இருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்துவர குடும்பத்தினரிடமிருந்தும், மாணவர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றது.

இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக, புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமையில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டது மற்றும் சென்னை அயலகத் தமிழர் நல ஆணையரகத்தில் 24/7 தொலைபேசி மையம் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் மீட்பு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. மேலும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அயலகத் தமிழர் நலத்துறையுடன் இணைந்து, தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார். மேலும், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், இ.ஆ.ப., ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தார்.

தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியின் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயர்கல்வி பயின்ற 242 மாணவர்கள் புதுதில்லி தமிழ்நாடு இல்லம் மூலம் விமானம் மற்றும் இரயில் வாயிலாக தமிழ்நாடு வந்தடைந்தனர். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆகியோர் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு, அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பாக தமிழ்நாடு வந்தடைந்த அம்மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்றையதினம் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து, அரசு எடுத்த உடனடி நடவடிக்கையினை பாராட்டி தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா. மு. நாசர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ,ப, பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் முனைவர். மா. வள்ளலார் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi