ஜெய்ப்பூர்: 18வது ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடி 2ல் வெற்றி 9ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் தனது சொந்த ஊரில் விளையாட இருப்பதால் அந்த அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த அணி கடைசியாக ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கம் தருகிறார். ஆனால் நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர் ஆகியோரும் சீராக ரன் குவிப்பதில் கோட்டை விடுகின்றனர்.
அவர்களிடமிருந்து இன்றைய போட்டியில் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கலாம். அதேபோல் புதிய வரவான வைபவ் சூர்யவன்ஷி இன்றைய போட்டியில் ஜொலிக்கலாம். பந்துவீச்சில் சந்தீப் சர்மா, ஜோப்ரா ஆர்ச்சர், ஹசரங்கா என வலுவாக இருந்தாலும் துஷார் தேஷ்பாண்டே ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். குஜராத் அணியை பொறுத்த வரை இதுவரை 8 போட்டிகளில் ஆடி 6ல் வெற்றி, 2ல் தோல்வி என 12 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் சாய் சுதர்ஷன் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.
கேப்டன் கில், ஜாஸ் பட்லர், ஷாருக் கான் என அதிரடி பேட்டிங் படை இருப்பதால் ராஜஸ்தானுக்கு இன்று சவால் காத்திருக்கிறது. இந்த சீசனில் பந்துவீச்சில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோர் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் குவிப்பை கட்டுப்படுத்துகின்றனர். எனவே தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ராஜஸ்தானும், புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற குஜராத்தும் வரிந்து கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.