Monday, June 23, 2025
Home செய்திகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்ததை எதிர்த்து மனு: அமலாக்கத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்ததை எதிர்த்து மனு: அமலாக்கத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

by Arun Kumar

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.

இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், போதைப்பொருள் கடத்தில் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை.

அதன் பின்னர் சிறை மாற்ற உத்தரவு பெற்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாபர் சாதிக் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், போதை பொருள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் திகார் சிறையில் இருந்து சிறை மாற்ற உத்தரவை அமலாக்கத்துறை பெற்றது. இந்தநிலையில் போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் திகார் சிறை நிர்வாகம் அளித்த சிறை மாற்ற உத்தரவு காலாவதியாகிவிட்டது.

அவ்வாறு காலாவதியான சிறை மாற்ற உத்தரவு மூலம் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது செல்லாது என்று வாதிட்டார். இதனையடுத்து, ஜாபர் சாதிக் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதனிடையே, ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது தந்தை அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பாகவும் அமாலக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi