ரபா: இருதரப்பு போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தரைவழித்தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் மீது அக்.7ம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1500 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மேலும் 224 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை ெபாழிந்து வருகின்றன. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இதனால் காசா பகுதி முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் காசாவில் எல்லைகளை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அங்குள்ள மக்கள் திணறிவருகிறார்கள். உணவு, குடிநீர், மருந்து பொருட்கள் கிடைக்கவில்லை. சடலங்கள் மயானங்களில் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்தநிலையில் காசா எல்லையில் முற்றுகையிட்டு இருந்த இஸ்ரேலிய படைகள் நேற்று இரவோடு இரவாக காசா பகுதிக்குள் நுழைந்தன.
பீரங்கிகளுடன் நுழைந்த இஸ்ரேலிய படை நேற்று திடீரென தரைவழித்தாக்குதலை தொடங்கியது. சுரங்கப்பாதை, ராக்கெட் லாஞ்சர்கள், ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்புகள் அடியோடு அழிக்கப்பட்டன. அந்த நேரத்தில் காசா முழுவதும் 250 முறை வான்வெளி தாக்குதலும் நடத்தப்பட்டது. வடக்கு காசா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு இருந்த கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதையடுத்து மீண்டும் இஸ்ரேலிய படை காசா எல்லைக்கு திரும்பியது. உரிய உத்தரவு பெற்ற பிறகு முழு அளவில் காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்து உள்ளது. இதற்கிடையே காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமானது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். லெபனானில் இருந்து செயல்படும் ஹமாஸின் கூட்டாளியான ஹெஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலிய படைக்கும் நேற்று மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். அதே போல் லெபனான், சிரியா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கூட இஸ்ரேல் விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.