Wednesday, July 9, 2025
Home செய்திகள்Showinpage ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலமைச்சரின் கண்டனம் வரவேற்கத்தக்கது: ஜவாஹிருல்லா

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலமைச்சரின் கண்டனம் வரவேற்கத்தக்கது: ஜவாஹிருல்லா

by Suresh

சென்னை: ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலமைச்சரின் கண்டனம் வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். “இந்திய மக்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் முதல்வரின் அறிக்கை இருந்தது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து மோடி அரசுக்கு கண்டிக்க மனமில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ” பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது ஏவுகணைகள் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல்.

ஐநா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இத்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதினை அந்நாடு பொருட்படுத்தவே இல்லை.

இத்தகைய சூழ்நிலையில் ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் அணு ஆயுதக் குற்றச்சாட்டைச் சுமத்தித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. உலகத்தின் நாட்டாமையாகத் தன்னைத் தானே பாவித்துக் கொண்டு இது போன்ற கொடுஞ்செயலில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஈரானும் பதிலடி கொடுத்துவரும் நிலையில் தேவையற்ற போர்ப் பதற்றம் உருவாகி இருக்கிறது.

ஐநா வகுத்துத் தந்துள்ள எந்த விதமான மனித உரிமை வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது இல்லை. அப்பாவி பொதுமக்கள் மீதும் அண்டை நாடுகளின் மீதும் போர் வெறியோடு ஏவுகணை வீசி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ நா மன்றத்தில் மோடி அரசு எடுத்துள்ள நிலைப்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது இந்தியா.

ஐ நா பொதுச் சபையில் காஸாவில் உடனடி சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் எ‌‌ன்ன தீர்மானத்திற்கு ஆதரவாக 149 நாடுகள் வாக்களித்தன. 19 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன. இந்த 19 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது.

1974ல் உருவாக்கப்பட்ட யாசர் அரபாத் தலைமை வகித்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை(பிஎல்ஒ) அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா என்ற பெருமையையும் 1988ல் பாலஸ்தீன நாடு என்ற கோட்பாட்டை அங்கீகரித்த சிறப்பையும் மோடி அரசு சிதைத்துள்ளது.

டிசம்பர் 2024ல் ஐ நா மன்றத்தில் சண்டை நிறுத்தம் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த மோடி அரசு தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? மோடி ஆட்சியை ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ் தலைவரின் கட்டளையினால் நிலைப்பாடு மாறியதா?

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து மோடி அரசு கண்டிக்க மனமில்லா சூழலில் ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும் என்றும் ஏற்கெனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசி, பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் இஸ்ரேலின் இந்த வன்முறைப்பாதை கண்டிக்கத்தக்கது் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்கிறேன். அனைத்து இந்திய மக்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் முதலமைச்சரின் வீரியமிக்க அறிக்கை அமைந்துள்ளதற்கு நெஞ்சார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi