Thursday, September 21, 2023
Home » ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டு ஐபிஎஸ் அதிகாரி மீது தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டு ஐபிஎஸ் அதிகாரி மீது தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

by Karthik Yash

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரியும் தோனி தொடர்ந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஐபிஎஸ் அதிகாரி தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் (தற்போது ஓய்வு பெற்றுள்ளார்) வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கடந்த 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சம்பத்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தோனி தாக்கல் செய்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை ஐபிஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் சம்பத்குமாரின் கருத்துகள் இருப்பதால், சம்பத்குமாரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தோனி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், வேண்டுமென்றே ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் கிரிக்கெட் வீரர் தோனி மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று வாதிட்டார். அதற்கு, சம்பத்குமார் தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, அந்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?