Thursday, May 22, 2025
Home செய்திகள் இன்று முதல் ஐபிஎல் கொண்டாட்டம்; ஈடன் கார்டனில் கொல்கத்தா – பெங்களூரு மோதல்: அதிரடி ஆக்‌ஷன்களுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

இன்று முதல் ஐபிஎல் கொண்டாட்டம்; ஈடன் கார்டனில் கொல்கத்தா – பெங்களூரு மோதல்: அதிரடி ஆக்‌ஷன்களுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

by Ranjith

சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 18வது தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. அங்கு இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் களம் காண உள்ளன. நாட்டின் முக்கிய லீக், கிரிக்கெட் உலகின் பிரபலமான உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஐபிஎல் டி20 போட்டியின் 18வது தொடர் இன்று தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் களம் காணும் இந்தப் போட்டியின் ஆட்டங்கள் நாட்டின் 13 நகரங்களில் நடைபெற உள்ளன.

மொத்தம் 70 போட்டிகளை கொண்ட லீக் சுற்று, மே 18ம் தேதி முடிகிறது. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மே 20, 21, 23 தேதிகளிலும், இறுதிப் போட்டி மே 25ம் தேதியும் நடைபெறும். இன்று, முதல் நாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு தொடங்கும். அதைத் தொடர்ந்து போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும். ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றால் முறையே மாலை 3.30, இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.

இன்று நடைபெறும் போட்டியில் புதிய கேப்டன் அஜின்கிய ரகானே தலைமையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா களம் காணுகிறது. அதனை எதிர்த்து களம் காணும் பெங்களூரு அணியும் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையில் விளையாட உள்ளது. கோப்பையை வென்று தந்த ஸ்ரேயாஸ் ஐயரையே தக்க வைக்காத கொல்கத்தா அணியின் தூண்களாக சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி, ஆந்த்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா ஆகியோர் பல தொடர்களாக தொடர்கின்றனர். அவர்களுடன் மொயீன் அலி, டி காக், பாவெல், குர்பாஸ் என வெளிநாட்டு வீரர்களும், மணிஷ் பாண்டே, ரிங்கு சிங், மயாங்க் மார்கண்டே, வைபவ் அரோரா ஆகியோரும் வெளுத்துக் கட்ட காத்திருக்கின்றனர்.

அதேபோல் பெங்களூரு அணியில் பழைய கேப்டன் கோஹ்லி, புது கேப்டன் ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல், புவனேஸ்வர், டிம் டேவிட், ஜேகப் பெதேல், லுங்கி நிகிடி, பில் சால்ட், லியம் லிங்ங்ஸ்டோன், ஹேசல்வுட், யாஷ் தயாள், ஸ்வப்னில் சிங் ஆகியோரும் இந்த முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவில் கலக்க காத்திருக்கின்றனர். அதனால் முதல் நாள் போட்டி பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

* நேருக்கு நேர்
* இரு அணிகளும் ஐபிஎல் தொடர்களில் 35 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் கொல்கத்தா 21 ஆட்டங்களிலும், பெங்களூரு 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
* ஈடன் கார்டன் அரங்கில் மோதிய 12 ஆட்டங்களில் கொல்கத்தா 8-4 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது
* இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் அதிகபட்சமாக கொல்கத்தா 222 ரன்னும், பெங்களூர் 221 ரன்னும் குவித்துள்ளன. குறைந்த பட்சமாக கொல்கத்தா 84 ரன் எடுக்க, பெங்களூரு 49 ரன்னில் சுருண்டுள்ளது.
* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் கொல்கத்தா 4-1 என்ற கணக்கில் பெங்களூரை விட அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
* இந்த 2 அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் கொல்கத்தா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும் 2 ஆட்டங்கள் கைவிடப்பட்டன. பெங்களூரு தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றியும், கடைசி ஆட்டத்தில் தோல்வியும் சந்தித்துள்ளது.

* ஐபிஎல்லுக்கு வழிவிட்ட சர்வதேச போட்டிகள்
* கிரிக்கெட் உலகின் முக்கிய போட்டியாக ஐபிஎல் போட்டி உள்ளது. உள்ளூர் வீரர்கள் மட்டுமின்றி உலக வீரர்களும் ஆர்வத்துடன் பங்கேற்கும் பணக்கார கிரிக்கெட் போட்டி ஐபிஎல். அதனால் ஐபிஎல் நடக்கும் காலங்களில் வழக்கமாக சர்வதேச தொடர்கள் நடைபெறாது. இந்த முறை நியூசிலாந்து-பாகிஸ்தான் தொடர் நடைபெறுகிறது. அதுவும் ஏப்.5ம் தேதி முடிந்து விடும்.

* வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்), அங்கு இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் நடந்ததால் தள்ளி வைக்கப்பட்டது. அதனால் பிஎஸ்எல் இந்த முறை ஏப்.11 முதல் மே 18 வரை நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத அல்ஜாரி ஜோசப், கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், லிட்டனர் தாஸ், டிம் செய்ஃபோர்ட், மேத்யூ ஷார்ட், டாரியல் மிட்செல், சிக்கந்தர் ராஸா, குசால் பெரேரா, ஷாய் ஹோப், மார்க் சாப்மேன், ஃபின் ஆலன், குசால் மெண்டீஸ் என பலர் பிஎஸ்எல் தொடரில் விளையாட உள்ளனர்.

* இனி அடுத்த சர்வதேச ஆட்டம் இங்கிலாந்தில் ஜூன் 11ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்தான்.

தமிழ்நாட்டின் தங்கங்கள்
* குஜராத் டைட்டன்ஸ் அதிரடி பேட்ஸ்மேன்
சாய் கிஷோர், ஆல்ரவுண்டர்கள் ரவி சாய் சுதர்சன், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
* சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை அணியிலும் தமிழ்நாட்டு வீரர்கள். அதுவும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆல் ரவுண்டர்களான
நட்சத்திர வீரர்கள் அஸ்வின் ரவிசந்திரன், விஜய் சங்கர், இளம் புயல் சி.ஆந்த்ரே சித்தார்த் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
* கொல்கத்தா கேஆர் சுழல் நாயகன் வருண் சக்கரவர்த்தி
* டெல்லி கேபிடல்ஸ் யார்க்கர் கிங் தங்கராசு நடராஜன்
* லக்னோ எஸ்ஜி 2024 ஐபிஎல் போட்டியில் கோஹ்லி விக்கெட்டை கொய்த மணிமாறன் சித்தார்த்

* சிலரின் சாதனைகள்… சிலரின் சோதனைகள்
* சென்னை சூப்பர் கிங்ஸ்: இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ளது. கடந்த முறை 5வது இடம் கிடைத்தது.
* சன்ரைசர்ஸ் ஐதராபாத்: ஒரு தடவை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி 2வது இடம் பிடித்தது.
* குஜராத் டைட்டன்ஸ்: அறிமுகமான தொடரிலேயே கோப்பையை வென்றது. கடந்த தொடரில் 8வது இடம்தான் கிடைத்தது.
* டெல்லி கேபிடல்ஸ்: ஒரே ஒரு முறை இறுதி போட்டியில் ஆடியுள்ளது. கடந்த முறை 6வது இடம் கிடைத்தது.
* கொல்கத்தா கேஆர்: இதுவரை 3 முறை கோப்பையை வென்றதுடன் நடப்பு சாம்பியனாகவும் உள்ளது
* லக்னோ எஸ்ஜி: விளையாடிய 2 தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி. கடந்த முறை 7வது இடம் தான் கிடைத்தது.
* ஆர்சி பெங்களூரு: எப்பாதும் கோப்பையை வெல்லும் அணி என்ற எதிர்பார்ப்புடன் களம் கண்டாலும் ஒரு முறை கூட கோப்பையை தொட முடியவில்லை. கடந்த முறை 4வது இடம் பெற்றது.
* ராஜஸ்தான் ராயல்ஸ்: ஒரு முறை, அதுவும் முதல்முறை சாம்பியன். கடந்த முறை 3வது இடம் பிடித்த அணி.
* மும்பை இந்தியன்ஸ்: சென்னையை போல் 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. எனினும் கடந்த முறை 10வது இடம், அதாவது கடைசி இடம் தான் கிடைத்தது.
* பஞ்சாப் கிங்ஸ்: இதுவரை கோப்பையை வெல்லாத மற்றொரு அணி. கடந்த தொடரில் 9வது இடம் கிடைத்தது.

* நாடு வாரியாக ஐபிஎல்லில் உள்ள வீரர்கள்
1.இந்தியா: 120
2.தென் ஆப்ரிக்கா -14
3.ஆஸ்திரேலியா-13
4.இங்கிலாந்து – 12
5.நியூசிலாந்து-7
6.ஆப்கானிஸ்தான்-6
7.இலங்கை -6
6.வெஸ்ட் இண்டீஸ்-4

* இந்த முறை ஏலத்தில் பங்கேற்ற 12 வங்கதேச வீரர்களில் முதல் முறையாக ஒருவரை கூட எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதேபோல் ஜிம்பாப்வே (3), அயர்லாந்து (2), ஸ்காட்லாந்து (1) மற்றும் முதல் முறையாக ஏலத்தில் பங்கேற்ற அமெரிக்கா (3) வீரர்களில் யாரும் தேர்வாகவில்லை

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi