சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன், ஐபிஎல் கிரிக்கெட் வீரரிடம் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் குற்றம்சாட்டினார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஐபிஎல் வீரர் ஜாஸ் இந்தர் சிங் மற்றும் அவரது தந்தை மஞ்சிந்தர் சிங் ஆகியோரை அழைத்து வந்தார். மேலும், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னியுடன் மஞ்சிந்தர் சிங் இருக்கும் படங்களையும் முதல்வர் காட்டினார்.
அப்போது பகவந்த் மான் கூறுகையில்:
ஜாஸ் இந்தர் சிங் ஐபிஎல் அணியின் பஞ்சாப் கிங்ஸில் இடம்பிடித்துள்ளார். ஆனால் அவர் பிளேயிங் 11ல் இல்லை. பஞ்சாப் பவனில் ஜாஸ் இந்தர் சிங்கும், அவரது தந்தையும் அப்போதைய முதல்வர் சன்னியை சந்தித்தனர். சன்னி அவர்களின் வேலை முடியும் என்றும், தனது மருமகன் ஜஷானை சந்திக்குமாறும் கூறியுள்ளார். அதே போல் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றிருந்த போது, கிரிக்கெட் வீரர் என்னை சந்தித்தார். அப்போது அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த வேலையை வாங்கி கொடுப்பதற்கு ஜஷான் ரூ.2 கோடி கேட்டதாக என்னிடம் கூறினார்.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சரண்ஜித்சிங் பதிலளிக்கவில்லையெனில் மேலும் பல ஆதாரங்களை வெளியிடுவேன் என்றார்.