திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி, கவுரவிக்கப்பட்டனர். திருக்கழுக்குன்றத்தில் நேற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மணி தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தார். விழாவின்போது, பெண்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும், பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த 14 பெண்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி ஆகியோர் விருதுகளையும், நினைவு பரிசையும் வழங்கினர். மேலும், மகப்பேறு மருத்துவர் இந்திராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் கல்வித்துறை அதிகாரிகள் உதயகுமார், சிவக்குமார், திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு, தனியார் அமைப்பின் நிர்வாகி தேவமனோகரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.