சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், தூய்மை மிஷன், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0ல் குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் கடந்த 30ம்தேதி அலையன்ஸ் பிரஞ்சைஸ் ஆப் மெட்ராஸில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இந்த குறும்பட போட்டியை மாஸ்டரிங் கேம்பஸ் கேரியருடன் இணைந்து வடிவமைத்து ஒருங்கிணைக்கப்பட்டது. கடந்த ஜூன் 6ம் தேதி இந்த குறும்பட போட்டியின் விதிமுறைகளும், ‘அன்றொரு நாள் கழிப்பறையில்’ என்ற போட்டியின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது. பல்வேறு குறும்படங்கள் இடம்பெற்ற நிலையில், பிரணத்தி சாம்பள்ளே இயக்கிய “சான்டாட்ஸ்” குறும்படம் முதலிடம் பிடித்தது.
இவருக்கு ரூ.1 லட்சத்திற்கான ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசை போட்டியின் நடுவர்களான, திரைப்பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோர் வழங்கினர். இரண்டாம் இடத்தை பெற்ற ஆனந்த். எம்.ஜே. இயக்கிய ‘வெளிக்கி’ குறும்படமும், 3ம் இடத்தை அமர் கீர்த்தி இயக்கிய ‘முரல்’ குறும்படமும் பெற்றது. நடுவர்கள் திரைப்பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி, கவிஞர் யுகபாரதி மற்றும் திரைப்பட இயக்குனர் ஷான் ஆகியோருடன் இணைந்த சிறு கலந்துரையாடல் நடந்தது. இதில் திரையிடப்பட்ட குறும்படங்களின் தலைப்புகள் குறித்தும் படங்களின் கதைகள் குறித்தும் பங்கேற்பாளர்களின் கேள்வி பதில்கள் உள்ளிட்ட கலந்துரையாடல்களுடன் நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.