வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அரசுக்கு எதிராக மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. திடீரென விசாக்கள் ரத்து செய்யப்பட்டதால் சர்வதேச மாணவர்கள் தடுப்பு காவல் மற்றும் நாடு கடத்தலுக்கு ஆளாகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஹார்வட் மற்றும் ஸ்டான்போர்ட் போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள் முதல் மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் ஓஹியோ பல்கலைக்கழகம் போன்ற பெரிய பொது நிறுவனங்கள் மற்றும் சிறிய கலை கல்லூரிகளில் பயிலும் சர்வதேச மாணவர்கள் வரை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஏராளமான மாணவர்கள் அதிபர் டிரம்ப் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். சுமார் 160 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக அமைப்புக்களில் இருந்து குறைந்தது 1,024 மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்களின் விசாக்களை அரசு ஏன் ரத்து செய்கிறது? என்று மாணவர்கள் வாதிட்டுள்ளனர். கல்லூரிகள் கூறுகையில், மாணவர்களின் போக்குவரத்து மீறல்கள் போன்ற சிறிய காரணங்களுக்காக கூட மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வாதிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான விசா ரத்துகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு போராட்டங்களில் எந்த பங்கும் இல்லை என்று கல்லூரிகள் தெரிவித்துள்ளன.