சென்னை: சர்வதேச கூட்டுறவு நாளை கொண்டாடும் வகையில் சென்னையில் வரும் ஜூலை 6ம் தேதி மாரத்தான் போட்டி நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவுகளின் சீரிய செயல்பாடுகளினால் ஏழை, எளிய மக்கள் சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு, அவர்களையும் உள்ளடக்கிய சமூக அமைப்பாக தமிழக கூட்டுறவுகள் சிறப்பு பெற்றுள்ளன. கூட்டுறவின் மகிமையை கொண்டாடும் வகையிலும், சர்வதேச கூட்டுறவு ஆண்டு-2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாளை கொண்டாடும் வகையிலும், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஜூலை 6ம் தேதி காலை 5.30 மணிக்கு சென்னை தீவுத்திடலில் தொடங்கி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
இதில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளோர்க்கு ஒரு பிரிவாகவும், 40 வயதிற்கு மேற்பட்டோர்க்கு இன்னொரு பிரிவாகவும், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடக்கிறது. இந்த மாரத்தானில் கலந்துகொள்ளும் ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பதக்கம், சான்றிதழ், டி-ஷர்ட் மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும். மேலும், முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்படும். மாரத்தானில் கலந்துகொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களும் https://www.tncu.tn.gov.in/marathon/register என்ற இணையதளம் வழி நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்தி பதிவு செய்து மாரத்தானில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.