புதுடெல்லி: உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று, எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்க மனுவை தாக்கல் செய்துள்ளார். இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக ஆகிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி, பொதுச்செயலாளர் ஆகிய விவகாரம் குறித்து சூர்யமூர்த்தி, புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்தரநாத் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் கொடுத்துள்ளது தற்போது வரையில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு விளக்க மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘அதிமுக கட்சி தொடர்பாக சூர்யமூர்த்தி என்பவர் அந்த கட்சியை சார்ந்தவர் கிடையாது. மேலும் தேர்தலில் வேறு கட்சியின் சார்பாக அ.தி.மு.க வேட்பாளரையே எதிர்த்து போட்டியிட்டவர். எனவே அவர் அ.தி.மு.க உள்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடுக்கவோ எந்தவித முகாந்திரமும் கிடையாது. மேலும் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம், பொதுச்செயலாளரை தேர்வு செய்வது ஆகிய உட்கட்சி விவகாரம் குறித்து சூர்யமூர்த்தி எழுப்ப முடியாது.
அவர் அதிமுக என்ற கட்சி மற்றும் அதன் விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர். குறிப்பாக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதுகுறித்து நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும். அதாவது உட்கட்சி விவகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லாத தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட முடியாது.மேலும் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை. இந்த விவகாரம் தேர்தல் ஆணைய விசாரணை வரம்புக்குள்ளும் வராது.எனவே சூர்யமூர்த்தியின் மனுக்களை மேற்கொண்டு எந்தவித விசாரணையும் நடத்தாமல் உடனடியாக நிராகரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.