சண்டிகர்: பஞ்சாபை சேர்ந்த சமூக ஊடக பிரபலம் காஞ்சன் குமாரி பதிண்டா. இவர் கமல் கவுர் பாபி என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை நடத்தி வந்தார். இதில் சுமார் 3.84லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். மேலும் இவர் பன்னி பாபி டிவி என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வந்தார். இதற்கு சுமார். 2.36லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். கடந்த 9ம் தேதி லூதியானாவின் லச்மன் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து விளம்பர நிகழ்ச்சிக்காக காஞ்சன் குமாரி புறப்பட்டு சென்றார்.
அதன் பின்னர் அவரை காணவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் பூச்சோ பகுதியல் ஆதேஷ் பல்கலைக்கழகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர்.
காரில் காஞ்சன் குமாரி சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே காஞ்சன் குமாரியின் மரணத்துக்கான உண்மை காரணம் தெரியவரும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டை சேர்ந்த கும்பல் ஒன்று அவரை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.