சென்னை: மீன்வளத்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மீனவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மீனவ மக்களிடம் கொண்டு சேர்த்தல், மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல், கடல் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரண திட்டங்களை செயல்படுத்துதல், மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்குதல், மீன்பிடி கலன்களை பதிவு செய்தல் மற்றும் உரிமம் வழங்குதல், கடல் மீன் வளர்ப்பு, கூண்டு வளர்ப்பை ஊக்குவித்தல், நவீன மீன்பிடி முறைகளில் பயிற்சி அளித்தல் போன்ற பல்வேறு பணிகளில் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இத்தகைய முக்கியவத்துவம் வாய்ந்த பணிகள் தொய்வின்றி நடைபெற மீன்வளத்துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு, 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகதலைவர் கவுதமன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.