தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் ராமசாமி (45). விவசாயி. இவரது மனைவி வெண்ணிலா (28). இவர்களுக்கு பவித்ரா (7) என்ற மகளும், முகில் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அங்குள்ள தோட்டத்து கிணற்றில் வெண்ணிலா மற்றும் அவரது 10 மாத ஆண் குழந்தை முகில் பிணமாக கிடந்தது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
புளியங்குடி போலீசார் நடத்திய விசாரணையில், வெண்ணிலா தனது துப்பட்டாவால் 10 மாத ஆண் குழந்தை முகிலை இடுப்பில் கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கணவர் ராமசாமியுடன் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டில் வசித்துள்ளார். நேற்று முன்தினம் அவர் யாருடனோ போனில் கோபமாக பேசியுள்ளார். அதற்கு பின்னர்தான் தற்கொலை முடிவு எடுத்துள்ளார். இதனால் போனில் பேசியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.