சென்னை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சாய்நாத் (55). தொழிலதிபர். இவர் மீது, மோசடி, சதி செய்தல் உட்பட 4 பிரிவுகளில், மத்தியபிரதேச மாநிலம், போபால் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இதையடுத்து போபால் மாநகர போலீஸ் கமிஷனர், சாய்நாத்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், எல்ஓசியும் போடப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தது.
அதில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர். இந்தநிலையில் அந்த விமானத்தில், சென்னையில் இருந்து கோலாலம்பூர் வழியாக, இந்தோனேசியா நாட்டிற்கு தப்பிச்செல்ல, சாய்நாத் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை, கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், அவர் போபால் மாநகர போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர். குடியுரிமை அதிகாரிகள், சாய்நாத்தின் விமான பயணத்தை ரத்து செய்தனர். இத் தகவலை போபால் போலீசாருக்கு தெரிவித்தனர். சாய்நாத்தை கைது செய்து அழைத்துச் செல்ல போபால் போலீசார் வருகின்றனர்.