புதுடெல்லி: காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க சலால், பாக்லிஹார் அணைகளின் மதகுகள் மூடப்பட்டன. நீர்த்தேக்கங்களில் தண்ணீரை சேமிக்க மதகுகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் ஜம்முவின் அக்னூர் பகுதியில் உள்ள செனாப் நதியில் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இடுப்பு மட்டத்திற்கு கீழே குறைந்துள்ளது. ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் உள்ள சலால் மற்றும் பாக்லிஹார் நீர் மின் அணைகளின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டதால் நீர் வரத்து குறைந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால், பாகிஸ்தான் அருகே ஓடும் செனாப் நதி வறண்டு காணப்பட்டது. இந்த சூழலில் நேற்று காலை பாக்லிஹாரில் உள்ள நீர்த்தேக்கம் நிரம்பத் தொடங்கியது. இதையடுத்து மூடப்பட்ட அணையின் சில மதகுகளை அதிகாரிகள் திறந்தனர். அதே போல் சலால் நீர் மின் திட்டத்தின் சில மதகுகளும் திறக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் செனாப் நதியைக் நடந்து கடக்க வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை எச்சரித்துள்ளது. நதி வறண்டதால் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களைத் தேடி அங்கு மக்கள் கூடினர். நேற்று மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. எனவே மூடப்பட்ட அணை மதகுகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக திறக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது.