Tuesday, June 17, 2025
Home செய்திகள்இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது: நிதி ஆயோக் சிஇஓ தகவல்

ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது: நிதி ஆயோக் சிஇஓ தகவல்

by Francis

புதுடெல்லி: சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி, இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக நிதி ஆயோக் சிஇஓ பிவிஆர். சுப்பிரமணியம் கூறி உள்ளார்.
வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பல்வேறு பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2022ல் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறிய நிலையில், தற்போது ஜப்பானை முந்தி 4வது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கிறது.
டெல்லியில் நேற்று முன்தினம் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு, நிதி ஆயோக் சிஇஓ பிவிஆர். சுப்பிரமணியம் சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) தரவுகளை மேற்கோள் காட்டி அளித்த பேட்டியில், ‘‘2024ம் ஆண்டு வரையில் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது.

இன்று ஜப்பானை முந்தி 4வது பெரிய பொருளாதாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டியிருக்கிறோம். தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இந்தியாவை விட பெரிய பொருளாதார நாடுகளாக உள்ளன. நாம் திட்டமிட்டபடி செயல்பட்டால், இன்னும் இரண்டரை அல்லது 3 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இருப்போம்’’ என்றார். ர்வதேச நிதியத்தின் ஏப்ரல் மாத உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில், ‘இந்தியா 2025ம் ஆண்டில் ஜப்பானை விட 4.19 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.187 டிரில்லியன் டாலராகவும், ஜப்பானின் ஜிடிபி 4.186 டிரில்லியன் டாலராகவும் இருப்பதாக ஐஎம்எப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சர்வதே நிதியத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் தனிநபர் வருமானம் 2013-14ல் 1,438 டாலராக (ரூ.1.22 லட்சம்) இருந்த நிலையில் 2025ல் 2,880 டாலராக (ரூ.2.44 லட்சம்) இரட்டிப்பாகி உள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற சூழல் மற்றும் அதிகரிக்கும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியிலும் 2025ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.2 சதவீத வளர்ச்சி காணும் என்றும் 2026ல் 6.3 சதவீததத்துடன் நிலையான வளர்ச்சியை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இருக்கும் சீனாவுக்கு மாற்றாக வேறு நாட்டின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகிறது. இதில் இந்தியா முக்கிய இடத்தை பிடிப்பதால் பல வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. எனவே, திட்டமிட்டபடி விரைவில் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சர்வதேச பொருளாதார வல்லுநர்களும் கூறுகின்றனர். 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 30 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi