வாஷிங்டன்: தியானம் செய்த தகராறால் விமானத்தில் சக பயணியின் கழுத்தை நெரித்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இருந்து மியாமிக்குச் சென்ற பிரன்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21) என்ற இளைஞர் பயணம் செய்தார். அவருக்கு முன்னால் உள்ள இருக்கையில் கீனு எவன்ஸ் என்ற மற்றொரு பயணி அமர்ந்திருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இஷான் சர்மா திடீரென விசித்திரமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கீனு எவன்ஸிடம் சென்று, ‘நீ மிகவும் மோசமான மனிதன்; என்னை எதிர்த்தால் உனக்கு மரணம் நிச்சயம்’ என்பது போன்ற மிரட்டல் வார்த்தைகளைக் கூறி சிரித்தார்.
இதனால் அச்சமடைந்த கீனு, விமானப் பணிப்பெண்களிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அவர்கள், இஷான் சர்மா மீண்டும் தொந்தரவு செய்தால் உதவிக்கான பட்டனை அழுத்தி அழைக்குமாறு கூறியுள்ளனர். இஷான் சர்மாவின் மிரட்டல்கள் தொடர்ந்ததால், மனமுடைந்த கீனு உதவி பட்டனை அழுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இஷான், கீனுவின் இருக்கைக்கு நேரில் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென கீனுவின் கழுத்தைப் பிடித்து நெரிக்கத் தொடங்கியதால், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பயணிகள் அவர்களை விலக்கிவிட முயன்றனர். விமானம் மியாமியில் தரையிறங்கியதும், இஷான் சர்மா கைது செய்யப்பட்டார்.
அவர் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இஷான் சர்மாவின் வழக்கறிஞர் கூறுகையில், ‘எனது கட்சிக்காரர் தனது மத நம்பிக்கையின்படி தியானம் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் இருந்த பயணிக்கு அது பிடிக்காததாலேயே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது’ என்றார்.