டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள 4 தீவிரவாத முகாம்கள், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் அழிக்கப்பட்டன. பகவல்பூர், தெஹ்ரா கலான், கோட்லி, முசாபராபாத்தில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்கள் அழிந்து போயின. முரிட்கே, பர்னலா, முசாபராபாத்தில் உள்ள லஷ்கர் அமைப்பின் முகாம்களும் இந்திய ராணுவத்தின் தாக்குதலால் அழிந்தன. சியால்கோட், கோட்லியில் இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. பகவல்பூர், முரிட் கேவில் மட்டும் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் ஜெய்ஸ் இ முகமது அமைப்பு, 2. மார்கஸ் தைபா, முரிட்கே லஷ்கர் இ தொய்பா அமைப்பு, 3. சர்ஜால், தெஹ்ரா கலான் ஜெய்ஸ் இ முகமது அமைப்பு, 4. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு, 5. மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா லஷ்கர் இ தொய்பா அமைப்பு, 6. மர்கஸ் அப்பாஸ், கோட்லி -ஜெய்ஸ் இ முகமது அமைப்பு, 7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு, 8. ஷவாய் நல்லா கேம்ப், முசாபராபாத் லஷ்கர் இ தொய்பா அமைப்பு, 9. சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் ஜெய்ஸ் இ முகமது ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய முரித்கே பகுதி, லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய பயிற்சி மையம் ஆகும். முரித்கே முகாமில் ஆண்டுக்கு 1000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர். 2019ல் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு முரித்கே முகாமில்தான் பயிற்சி அளிக்கப்பட்டது. முரித்கே முகாம் 82 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது – தீவிரவாத பயிற்சி பெறுவோருக்கு குடியிருப்புகளும் உள்ளன.