நார்தாம்டன்: இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2வது அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டி நார்தாம்டனில் கடந்த 6ம் தேதி துவங்கியது. முதலில் களமிறங்கிய இந்தியா ஏ அணி, முதல் இன்னிங்சில் 348 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 3வது நாளில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின், 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஏ, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று முன்தினம் உணவு இடைவேளைக்குள் மேலும் 3 விக்கெட்டுகள் விழுந்தன.
அதன் பின், இணை சேர்ந்த தனுஷ் கோடியன், அன்ஷுல் காம்போஜ் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் இறங்கினர். இவர்கள் கடைசி வரை அவுட்டாகாமல், 149 ரன்கள் சேர்த்தனர். தனுஷ் 90 ரன், காம்போஜ் 51 ரன் எடுத்திருந்தபோது, 7 விக்கெட் இழப்புக்கு 417 ரன் என்ற ஸ்கோருடன் இந்தியா ஏ, டிக்ளேர் செய்தது. அதன் பின் 439 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து லயன்ஸ், ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 32 ரன் மட்டுமே எடுத்ததால், போட்டி டிராவில் முடிந்தது.