Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியை முந்தினார் அதானி: ரூ.11.60 லட்சம் கோடி சொத்துகளுடன் முதலிடம்

புதுடெல்லி: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானியை கவுதம் அதானி முந்தினார். ஹுருன் இந்தியாவின் நிறுவனம் 2024 ஜூலை மாத கணக்குப்படி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் 2020ல் 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியை முந்தினார். அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 11.60 லட்சம் கோடி சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

அதானியின் சொத்து கடந்த ஓராண்டில் 95 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு அவரது சொத்து கடந்த ஒருவருடத்தில் வேகமாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டை விட 95 சதவீதம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு ரூ. 1,021,600 கோடி சொத்து குவிந்துள்ளது. இந்தியாவின் நம்பர் 2 பணக்காரர் என்ற இடத்தில் ரூ. 10.14 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி உள்ளார்.

மூன்றாவது இடத்தில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ்நாடார், 4வது இடத்தில் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தலைவர் சைரஸ் பூனவாலா, 5வது இடத்தில் சன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் திலீப் ஷங்வி உள்ளனர். நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 334 என்ற சாதனையை எட்டியுள்ளது. நமது நாடு ஆசியாவிலேயே கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடாக உயர்ந்துள்ளது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் சீனா 25% சரிவைக் கண்டபோதும், இந்தியா 29% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒரு கோடீ ஸ்வரரை இந்தியா உருவாக்கியது. 2023ல் நமது நாட்டில் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர்.

அதே போல் இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியல் அதிகரித்துள்ளது. 1,500 க்கும் மேற்பட்ட தனிநபர்களின் நிகர சொத்து மதிப்பு ரூ. 1,000 கோடி அல்லது அதற்கு மேல் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இது 150% வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த ஆண்டு ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 1539ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த பட்டியலில் 220 பேர் சேர்ந்துள்ளனர். இளைய கோடீஸ்வரர் பட்டியலில் செப்டோ கைவல்யா வோரா (வயது 21) , இணை நிறுவனரான ஆதித் பாலிச்சா(வயது 22) ஆகியோர் ரூ.41 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.