இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்றும், பிரச்னையைத் தீர்க்க ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் கடந்த சில நாட்களுக்கு முன் லாகூரில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஷெரீப்பிடம் நவாஸ் கேட்டறிந்தார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் முடிவு, இப்பகுதியில் போர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஷாபாஸ் நவாஸ் ஷெரீப்பிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று நவாஸ் ஷெரீப் தனது சகோதரருக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுடனான நல்லுறவை ராஜதந்திர வழிகள் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் நவாஸ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் மூன்று முறை பதவி வகித்த நிலையில், தற்போது தனது சகோதரர் மூலம் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி வருகிறார் என்ற விமர்சனங்களும் உள்ளன.