Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா-பாக். மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது நான்தான்: 7வது முறையாக சொல்லும் டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் மோதலை நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். இப்போது 7வது முறையாக கூறியிருக்கிறார். காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. இதனால் பாகிஸ்தான், அத்துமீறி தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. அந்த தாக்குதலையும் இந்தியா முறியடித்தது. இந்த தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், மோதலை முடித்து கொள்ள கோரிக்கை விடுத்தது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக இந்தியாவும் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக்கொண்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, டிரம்பை சந்திக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தார். அவர்களது சந்திப்பு நடந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் என்ன செய்தோம் என்பதை பாருங்கள்.

அந்த விவகாரத்தை முழுமையாக தீர்த்து வைத்தோம். அதை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தேன். விரைவில் உக்ரைன்- ரஷ்யா மோதலையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வர போகிறேன். இது மட்டுமின்றி, இந்தியாவுடன் ஒரு மிக பெரிய ஒப்பந்தத்தை தயார் செய்து வருகிறேன்’ என்றார். இந்தியா- பாகிஸ்தான் மோதலை நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என டிரம்ப் சொல்வதும் இது முதல்முறை அல்ல. இது 7வது முறையாகும். சமீபத்தில் சவுதிக்கு சென்றபோதும்கூட இந்தியா-பாகிஸ்தான் மோதலை நான்தான் முடிவுக்கு வந்தேன் என்று பேசியிருந்தார். அதேநேரம் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் அமெரிக்கா உட்பட எந்த ஒரு வெளிநாடுகளின் தலையீடுகளும் இல்லை என்பதை தொடர்ந்து மறுத்தே வருகிறது. இந்த வார தொடக்கத்தில்கூட, வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழுவிடம் இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார்.

அதில், ‘இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை’ என்று தெளிவுபடுத்தியிருந்தார். அதேநேரம் இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததை முதலில் டிரம்ப்தான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து இருந்தாரே என்று கேட்டதற்கு அமெரிக்காவுடன் நடந்த உரையாடல்கள் வழக்கமானவைதான்’ என்றும் கூறியிருந்தார்.