டெல்லி: இந்தியாவில் டெல்லி, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.19 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து 70 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 அலகுகள் பதிவாகி இருந்தது. இதேபோல பாகிஸ்தானின் இஸ்லாமபாத், பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாணங்களிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆகப் பதிவானது.
இதையடுத்து டெல்லி, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் நில அதிர்வுகள் உணரப்பட்டன. ஏற்கனவே இமயமலையின் உத்தரகாண்ட் மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நில அதிர்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.