
சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அதனடிப்படையில், பின்வரும் அறிவிப்புகளை அறிவிப்பதில், உங்களோடு சேர்ந்து நானும் ஓரளவிற்கு மகிழ்ச்சி அடைந்து, அவற்றை அறிவிக்கிறேன். முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூபாய் 25 ஆயிரம் என்பது, ரூபாய் 30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும். அதேபோல், தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 12,500 என்பது, மாதம் ஒன்றிற்கு ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தப்படும். அதேபோல், முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு, தற்போது ஆண்டு ஒன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 50 ஆயிரம் ரூபாய் என்பது, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.