சென்னை: தமிழ்நாட்டில் ‘மா’ விளைச்சல் அதிகரித்து உள்ளதால், மா விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், மாம்பழ விலை வீழ்ச்சியை ஈடுசெய்ய சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்தி, விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்:
தமிழ்நாட்டில் சுமார் 1.46 லட்சம் எக்டரில் ‘மா’ சாகுபடி செய்யப்பட்டு அதில் 9.49 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி அடையப்பட்டு பழப்பயிர் சாகுபடியில் தமிழ்நாடு ‘மா’ உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு ‘மா’ மகசூல் அதிகரித்துள்ளதாலும், மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களின் கொள்முதல் குறைவாலும் மாம்பழ விலை கிலோவுக்கு ரூ.5க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வது அல்லது மரத்திலேயே பழுக்க விட்டுள்ளனர்.
மாங்கனி விலையில் சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் ‘மா’ விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரத்தை போக்கிட அவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவது இத்தருணத்தில் மிகவும் அவசியம். இதில் ஒன்றிய அரசு தலையிட்டு, ஒன்றிய அரசின் சந்தை தலையீட்டுத் திட்டத்தில் தற்போது உள்ள மாங்கனி விற்பனை விலைக்கும் சந்தைத் தலையீட்டு விலைக்கும் உள்ள வித்தியாசத்தை நேரடியாக விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
”மா” விவசாயிகள் குறைந்தபட்சம் சாகுபடி செலவைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், நியாயமான விலையில் கொள்முதல் நடவடிக்கைகளை தொடங்க மத்திய கொள்முதல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதன்படி முதலாவதாக, மாம்பழச் சாற்றில் உள்ள பழக் கூழின் உள்ளடக்கம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல், குறைந்தபட்ச அளவு மாம்பழக் கூழ் இருக்க வேண்டும் என்பதை மாம்பழச்சாறு பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. எனவே, பானங்களில் பழக் கூழை கலப்பதில் மாம்பழச்சாறு பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் FSSAI தரநிலைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய பொருத்தமான வழிமுறைகளை இந்திய அரசு வெளியிட வேண்டும்.
இரண்டாவதாக, மாம்பழக்கூழுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக உள்ளதால் நிறுவனங்கள் அதிக அளவில் மாம்பழக்கூழ் தயாரித்திட ஆர்வமில்லாமல் உள்ளனர். எனவே, மாம்பழக் கூழுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும். இது தற்போதைய துயரச் சூழ்நிலையை சமாளிக்க ஒரு குறிப்பிடத்தக்க படியாக மட்டுமல்லாமல், நமது விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு நிரந்தர ஏற்பாடாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மாம்பழம் உற்பத்தி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட பிரச்னைகளை தீர்க்க பிரதமர் இதில் தலையிட்டு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
ஒன்றிய அமைச்சருடன் இன்று தமிழக அமைச்சர் சந்திப்பு
மா விவசாயிகளின் நலனை காத்திடக் கோரி ஒன்றிய வேளாண்மை – உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் கடிதங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி இன்று (25ம் தேதி) டெல்லியில் ஒன்றிய வேளாண்மை – உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கி, இப்பிரச்னைக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள உள்ளார். அமைச்சர் அர.சக்கரபாணியுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன், ஒசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் ஆகியோரும் செல்கின்றனர்.