பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள மகாத் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை துணைவேந்தராக இருந்தவர் ராஜேந்திர பிரசாத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பிரசாத் குறிப்பிட்ட ஆண்டுகளில் ரூ.2 கோடியே 66 லட்சம் வருமானம் ஈட்டியது தெரியவந்தது. இதில், பண மோசடி நடந்திருப்பது தெரியவந்ததால் அமலாக்கத்துறை இது பற்றிவழக்கு பதிவு செய்து விசாரித்தது.
விசாரணையில், ராஜேந்திர பிரசாத் தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் தனது மகன் அசோக் குமார், சகோதரர் அவதேஷ் பிரசாத் உள்ளிட்டோர் பெயரில் 5 சொத்துகளை வாங்கியுள்ளார். ஆர்பி கல்லூரி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் அவரது குடும்பத்தினர் நடத்தும் பியாரிதேவி நினைவு அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராஜேந்திர பிரசாத்தின் ரூ.64.53 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கதுறை முடக்கியது. இந்த நிலையில், ராஜேந்திர பிரசாத், அசோக் குமார் மற்றும் அவதேஷ் பிரசாத்துக்கு எதிராக பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.