Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

திருத்தணி: திருத்தணி நகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையை இயற்கை உரமாக தயாரித்து அதனை விற்பனை செய்யும் நிலையத்தை நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இங்குள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கும் மக்கும் குப்பையை பெரியார் நகரில் உள்ள செயலாக்கம் மையத்தில் கொட்டி இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் செழிப்பு இயற்கை உர விற்பனை நிலையத்தை நகராட்சி ஆணையர் அருள், நகர மன்ற துணைத் தலைவர் சாமிராஜ் ஆகியோர் முன்னிலையில் நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இயற்கை உரம் விற்பனை குறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த இயற்கை உரம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள விற்பனை மையத்தில் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படும், வருவதாகவும் இயற்கை உரம் தேவைப்படும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

அதிக அளவில் இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால் விவசாயிகள் வீடுகளுக்கு நகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் எடுத்து வந்து வழங்குவார்கள் என நகராட்சி ஆணையர் கூறினார். திருத்தணி நகராட்சியின் சார்பில் இந்த இயற்கை உரம் விற்பனை திட்டம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

* சுகாதார பணிகளுக்கு ரூ.30 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் வரும் 29ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா 5 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் திருத்தணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வருகை தர உள்ளனர். இந்நிலையில், திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை பராமரிப்பு, தற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர், தற்காலிக பொது கழிப்பிடங்கள், துப்புரவு பணி, உள்பட அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள நகரமன்றத் தலைவர் சரஸ்வதி பூபதி தலைமையில் நேற்று நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.