சோழிங்கநல்லூர்:சென்னை பெரம்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அகிலன். இவரது மனைவி நாகவல்லி. இவர்களது மகள் அர்ச்சனா(20). இந்நிலையில், அர்ச்சனாவுக்கும், மாதவரம் பர்மா காலனி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்கள் இருவருரையும் அகிலன் குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, புதுப்பெண் அர்ச்சனா, வரவேற்பு நிகழ்ச்சிக்காக பியூட்டி பார்லர் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே சென்ற அர்ச்சனா வீட்டிற்கு வராததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அர்ச்சனாவை செல்போனில் தொடர்பு கொண்டனர்.
ஆனால், அர்ச்சனாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் கவலை அடைந்த பெற்றோர் அர்ச்சனாவின் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது, அர்ச்சனா ஏற்கெனவே கொடுங்கையூர் எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கலை(எ) கலையரசன் என்பவரை காதலித்து வந்ததாகவும், திருமணத்தில் விருப்பம் இல்லாததால் காதலுடன் சென்றதாக தெரிவித்தனர்.இதனை அறிந்த அர்ச்சனாவின் பெற்றோர், திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து கலையரசனை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால், கலையரசனின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீசார் திருமணம் முடிந்த கையோடு காதலுடன் சென்ற புதுப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.