ஆவடி: சென்னை தாம்பரம் மடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர் கடந்த மாதம் 27ம் தேதி ஐயபாக்கத்தில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பையில் இருந்த நகை பெட்டி மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதனிடையே திருமண மண்டபத்தில் வேலை செய்யும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் மணமகன் அறையின் கட்டிலின் கீழே இருந்து நகை பெட்டியை எடுத்து மண்டப மேலாளரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் நகை பெட்டியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மண்டபத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். பெட்டியில் இருந்த தங்கம் வைர நகைகளின் மதிப்பு ரூ.35 லட்சம் என தெரிகிறது.அதனைத்தொடர்ந்து நகை பெட்டியை பத்திரமாக ஒப்படைத்த ஜெயமணியின் நேர்மையை பாராட்டு அவரை ஆவடி துணை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினர். நகைகள் மீட்கப்பட்டது குறித்து ராமகிருஷ்ணன் – மீனாட்சி தம்பதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துணை ஆணையர் அலுவலகம் வந்த தம்பதியினர் ஜெயமணிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் 4 கிராம் மோதிரம் பரிசாக வழங்கினர்.