புதுடெல்லி: தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் தங்கம் கடத்தல் கணிசமாக குறைந்துள்ளதாக ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்(சிபிஐசி) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் டெல்லியில நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சஞ்சய் குமார் அகர்வால் கூறியதாவது, “நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் – ஜூன் வரையிலான காலகட்டத்தில், பல்வேறு விமான நிலையங்களில் சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் 847 கிலோ எடையுள்ள ரூ.544 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக ஒன்றிய அரசு குறைத்தது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு தங்கம் கடத்தல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில், ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் மட்டும் 4,869 கிலோ அளவிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். 1,922 பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கம் கடத்தல் கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடத்தலை தடுக்க சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ” என்று இவ்வாறு தெரிவித்தார்.