சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால், உயர் நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.