சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனை முடிவில், இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு இல்லை என்பதால் அவர் பிற்பகல் வீடு திரும்பினார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருப்பவர் மா.சுப்பிரமணியன். அவர், நேற்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உதவியாளர்கள் அவரை உடனடியாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சர்க்கரையின் அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்துக் கண்காணித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் நேற்று பிற்பகல் 2 மணியவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பினார்.
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நேற்று) அதிகாலை நடைபயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும்போது தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு இதய ரத்த நாள பரிசோதனை (ஆஞ்சியோகிராம்) செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
அமைச்சருக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு நேற்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.