சென்னை: அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளதால் எடப்பாடி பழனிசாமியை அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்கக் கோரி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமனத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தவறானது என்று கே.சி.பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.குமார், டி.தியாகேஸ்வரன் ஆகியோர் வாதிட்டனர். இதையடுத்து, இந்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.