Sunday, June 15, 2025
Home செய்திகள்Showinpage ஐஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்: உயர்கல்வி செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஐஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்: உயர்கல்வி செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: ஐஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி அருகே கருமந்துறையை சேர்ந்தவர் ஆண்டி. டெய்லரான இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற மகனும் உள்ளனர். தம்பதியின் 2வது மகள் ராஜேஸ்வரி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்களும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 521 மதிப்பெண்களும் எடுத்தார்.

தொடர்ந்து பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பிய ராஜேஸ்வரி, பெருந்துறையில் உள்ள அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து ஜே.இ.இ. நுழைவு தேர்வை எழுதினார். இதில் ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417வது இடத்தை பிடித்தார். இதையடுத்து ராஜேஸ்வரிக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் சேர இடம் கிடைத்தது. இதன் மூலம் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்மக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி ராஜேஸ்வரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்! அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஸ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடிக்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi