பெனிகார்லோ: ஸ்பெயினில் நடந்து வரும் ஐடிஎப் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் தமிழக வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் அபார வெற்றி பெற்றார். பிப்ரவரி மாதம் நடந்த மும்பை ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறி டென்னிஸ் உலகின் கவனத்தை ஈர்த்தவர் தமிழக வீராங்கனை மாயா ரேவதி ராஜேஸ்வரன் (15). கோவையை சேர்ந்த மாயாவின் திறமையை பார்த்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் (ஸ்பெயின்) உடனடியாக தனது பயிற்சி மையத்தில் சேர அழைப்பு விடுத்தார்.
அதனையடுத்து அங்கு சென்ற மாயா நேரடியாக நடாலின் மேற்பார்வையில் பயிற்சி பெற்றார். இந்நிலையில் ஸ்பெயினின் பெனிகார்லோ நகரில் நடக்கும் ஐடிஎப் இளையோர் ஜே200 டென்னிஸ் போட்டியில் அவர் விளையாடி வருகிறார். ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போலந்து வீராங்கனை அன்னா கிமிய்சிக் ((16) உடன் மோதினார். அதில் மாயா 7-5, 2-6, 6-3 என்ற செட்களில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2வது சுற்றில் கிரேட் பிரிட்டன் வீராங்கனை ஹோலி ஸ்மார்ட் (15) உடன் மாயா இன்று மோதுகிறார்.