Wednesday, July 9, 2025
Home செய்திகள்குற்றம் மகன் திருமணத்தில் மதிக்காததால் மனைவியை குத்திக் கொன்றேன்: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

மகன் திருமணத்தில் மதிக்காததால் மனைவியை குத்திக் கொன்றேன்: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

by Neethimaan

கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக்கொல்லை ஆசாரி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை(55), தச்சு தொழிலாளி. இவருக்கு அமுதா(50) என்ற மனைவியும், ராஜதுரை(30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில், மகன் ராஜதுரையுடன் குள்ளஞ்சாவடியில் அமுதா வசித்து வந்தார். தாயின் ஏற்பாட்டின் பேரில் மகனுக்கு 3 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து குறிஞ்சிப்பாடியில் உள்ள பெண் வீட்டில் கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் அண்ணாதுரை, அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். விருந்து முடிந்த நிலையில் நேற்று தனது மாமியாரை (அண்ணாதுரையின் தாயார்) குள்ளஞ்சாவடியில் இருந்து நெல்லிக்கொல்லையில் உள்ள தனது கணவரின் வீட்டில் விடுவதற்காக அமுதா ஒரு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.

இதனிடையே வீட்டின் பின்புறம் உள்ள குப்பைமேட்டில் அமுதா கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அமுதாவை, அவரது கணவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், வளையமாதேவி டாஸ்மாக் கடை அருகே பதுங்கியிருந்த அண்ணாதுரையை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு: அமுதா ஏற்பாட்டின்பேரில் மகன் ராஜதுரைக்கு திருமணம் நடந்து, நேற்று முன்தினம் அங்கு கறி விருந்து நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட அண்ணாதுரையை மனைவி உள்பட யாரும் மதிக்காததால் கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த விருந்தில் கலந்து கொண்ட தனது மாமியாரை கணவர் வீட்டில் விட நெல்லிக்கொல்லைக்கு அமுதா ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். அப்போது, கணவன், மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த அண்ணாதுரை ஆசாரி வேலைக்கு பயன்படுத்தும் கூர்மையான ஆயுதத்தால் (உளி) மனைவி அமுதாவின் கை, கால், முகத்தில் சரமாரியாக குத்தி உள்ளார். அமுதா அலறி துடித்ததால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் அங்கிருந்து ஆட்டோவில் வேகமாக தப்பிச்சென்று விட்டார். இதற்கிடையே மனைவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் அண்ணாதுரை தலைமறைவாகி விட்டார். ஆனால் வளையமாதேவியில் அவரை போலீசார் பிடித்து விட்டனர்.
இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi