திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நிஜாம்பேட்டையில் பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரம் ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் உள்ள முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. போலீசார் அங்கு வந்து பார்த்த போது, சூட்கேஸ் ஒன்றில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் இருப்பது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையானவர் நேபாள நாட்டை சேர்ந்த தாரா பெஹாரா(33) என்பதும், அவரது கள்ளக்காதலனான ஐதராபாத் இந்திரம்மா காலனியை சேர்ந்த விஜய்தோபா(30) என்பவர் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் விஜய்தோபாவை பிடித்து விசாரித்தனர். அப்போது, தாராபெஹாராவிற்கு திருமணமாகி கணவர், 2 குழந்தைகள் உள்ளதும், காதலனுடன் நேபாளத்தில் இருந்து ஐதராபாத் வந்து பாஸ்ட் புட் கடை நடத்தியதும் தெரியவந்தது. தற்போது தாராபெஹாரா கர்ப்பம் ஆனதால் அதை கலைக்க விஜய்தோபா வற்புறுத்தி உள்ளார். அதற்கு மறுத்ததால் கொலை செய்து பெரிய சூட்கேசை வாங்கி அதில் உடலை அடைத்து, முள்புதரில் வீசிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. விஜய்தோபாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.