சென்னை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல திட்டத்தின் மாதிரி சோதனை ஓட்டம் வெற்றிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல திட்டத்தின் மாதிரி சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அனுப்பப்பட்ட ககன்யான் மாதிரி விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் பயணித்து வங்கக் கடலில் இறங்கியுள்ளது. ககன்யான் திட்டம் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்ப உள்ள நிலையில் அதற்கான முதற்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. முதற்கட்ட சோதனையைப் போலவே அடுத்தடுத்த சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்தி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையைப் படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.