நன்றி குங்குமம் தோழி
ஓவியங்கள் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு ஓவியரும் தங்களின் கலை மற்றவர்களை விட வித்தியாசமாக தெரிய வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதற்காக அவர்கள பல
யுக்திகளை கையாள்வார்கள். அந்த வகையில் நிவேதா டீத்தூளில் இருந்து தயாரிக்கப்படும் பெயின்டினால் ஓவியங்களை வரைந்து வருகிறார். இவை பார்க்க வித்தியாசமான நிறங்களில் இருப்பதால் பலர் அதனை விரும்புகிறார்கள். மேலும், இவர் ஓவியங்களை வரைவது மட்டுமில்லாமல் அதை கற்க விரும்புபவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.
‘‘திண்டிவனம் அருகி லுள்ள செஞ்சியில்தான் நான் பிறந்தேன், வளர்ந்தேன். தற்போது நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே ஓவியங்கள் மீது தனிப்பட்ட ஆர்வம் அதிகம். வாரம் ஒன்று வரைந்துவிடுவேன். அப்படி என்னால் வரைய முடியாமல் போனால் என்னமோ அந்த வாரம் முழுதும் முழுமையடையாமல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
வீட்டில் ஓவியங்கள் வரைய நான் பயிற்சி எடுத்துக்கொண்டதால், பள்ளியில் படிக்கும் போது ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கேன். ஆனால், அப்போது நான் ஓவியங்களுக்கு என தனிப்பட்ட பயிற்சி எல்லாம் எடுக்கவில்லை என்பதால், போட்டிகளில் பரிசுகள் எல்லாம் பெறவில்லை. அதன் பிறகு நான் 9ம் வகுப்பு படிக்கும் போது தான் ஓவியப் போட்டிகளில் சீரியசாக பங்கு பெற ஆரம்பித்தேன். என் வீட்டிலும், எனக்கு ஓவியத்தின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினை புரிந்துகொண்டு என்னை மேலும் ஊக்குவித்தார்கள். அதில் பரிசுகளும் பெற்றேன்’’ என்றவர், கொரோனா காலக்கட்டத்தில் ஓவியங்கள் வரைவதற்கான பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.
‘‘கொரோனா எல்லோரையும் வீட்டில் முடங்க வைத்தது. ஆனால், நான் அதனை என்னுடைய ஓவியப் பயிற்சிக்காக பயன்படுத்திக் கொண்டேன். புது விதமான ஓவியங்களுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டேன். பொதுவாக ஓவியர்கள் பலர் இருந்தாலும் அதில் சிலரின் ஓவியங்கள் மட்டுமே வெளியே தெரிய வரும். காரணம், அவர்களின் ஓவியத்தில் ஒரு தனித்துவம் இருக்கும். அது அவர்களின் தனிப்பட்ட ஸ்டைல். என்னுடைய ஓவியமும் அப்படி தனித்து தெரிய வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக பென்சில் போர்ட்ரேட், சுவர் ஓவியம், டிஜிட்டல் ஆர்ட், முகல் பெயின்டிங், ஆரி ஒர்க், லைவ் ஆர்ட், மெஹந்தி என அனைத்தும் கற்றுக்கொண்டேன்.
அதன் வரிசையில் வேறு என்ன புதுமையாக ஓவியங்கள் தீட்டலாம் என்று நான் சிந்தித்த போது டீ பெயின்டிங் பற்றி தெரிய வந்தது. அது குறித்த தேடலில் நான் இறங்கிய போது, அந்த ஓவியங்கள் ரொம்பவே குறைவாக இருந்தது. மேலும், இந்த ஓவியங்களை எவ்வாறு வரைய வேண்டும் என்று யாரும் சொல்லியும் தரல. ஓவியங்கள் பார்க்க அழகாக இருந்தாலும், அதை வரைய யாரும் முன் வரல. காரணம், இந்த ஓவியங்கள் வரைய நீண்ட நாட்கள் ஆகும். முதலில் டீத்தூளை கொதிக்க வைத்து, அதை இரண்டு வாரங்கள் பத்திரமாக வைக்க வேண்டும். அப்போதுதான் அதை பெயின்டாக பயன்படுத்த முடியும். இல்லையென்றால், பூஞ்சைப் பிடித்து விடும்.
டீத்தூளில் பெயின்டினை தயாரிப்பது சுலபமானது இல்லை என்பதால், பலரும் இதை பயன்படுத்துவதில்லை. நான் ஒரு டீ லவ்வர். எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் ஓவியம். இதை இரண்டையும் ஒன்றாக இணைத்தால் என்னவென்று தோன்றியது. களத்தில் இறங்கினேன். ஒரு ஓவியம் வரைய குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஆகும். ஓவியங்கள் பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். வரைவதும் கடினம். மற்ற ஓவியங்களை பல நிறங்களில் வரையலாம்.
ஆனால், இதற்கு ஒரே நிறத்தினை பயன்படுத்துவதால், மேலும், ஓவியம் முழுதும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும் என்பதால் பொறுமையாக வரைய வேண்டும். இதில் போர்ட்ரேட் ஓவியங்கள்தான் அதிகமாக வரைய முடியும். மனிதர்களை டீத்தூள் பெயின்டில் ஓவியமாக தீட்டும் போது பார்க்க அழகாக இருக்கும். நான் இதில் வரைகிறேன் என்று தெரிந்து பலர் தங்களின் செல்லப்பிராணிகளை வரைந்து தரச்சொல்லி கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை பிடித்து செய்யும் போது அதில் மனத் திருப்தி ஏற்படும்.
நான் ஓவியங்களை யாரிடமும் சென்று பயிற்சி பெறவில்லை. நானாக வரைந்து தான் கற்றுக்கொண்டேன். அதனால் நான் முன்பு வரைந்த ஓவியங்களை ஒப்பிட்டு பார்த்து, என் ஓவியத் திறமையை மெருகேற்றிக் கொள்கிறேன். நான் செய்யும் ஒவ்வொரு தவறிலிருந்தும்தான் கற்றுக்கொள்கிறேன். அப்படி நான் வரைந்ததில் எனக்கு மிகவும் பிடித்தது கிருஷ்ணரின்
ஓவியம்’’ என்கிறார் நிவேதா.
தொகுப்பு: மா.வினோத்குமார்