கிருஷ்ணகிரி: ஓசூரில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 39 செண்ட் வீட்டு வசதி வாரிய நிலத்தை, போலி ஆவணம் தயாரித்து முறைகேடாக பத்திர பதிவு செய்து விற்ற, உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோகுல் நகர் பகுதியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமாக இடம் உள்ளது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 16ல், நிலம் விற்பனை நடைபெற்றது. குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற நிலத்தை சில நபர்கள் போலியாக ஆவணங்கள் தயாரித்து, பத்திர பதிவு செய்ததாக வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்கு புகார் வந்தது.
இது குறித்து, அவர் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜாரவி தங்கம் தலைமையில், இன்ஸ்பெக்டர் சாவித்ரி, எஸ்.ஐ.மஞ்சுநாத் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 39 செண்ட் வீட்டு வசதி வாரிய நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து 5 பேருக்கு விற்பனை செய்ததாக, திருப்பூர் மாவட்டம் மானூரைச் சேர்ந்த மதி (எ) மதியழகன்(50), சென்னை அய்யம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர்(55), சென்னை மாதவரத்தை சேர்ந்த ஆராவமுது(58), திருவள்ளூர் மாவட்டம், அய்யம்பாக்கம் திருவேற்காட்டை சேர்ந்த முருகதாஸ்(55), கன்னியாகுமரி மாவட்டம் கட்டாந்துரையை சேர்ந்த ஆனந்த் (50), ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த சதீஷ் (37), சென்னை சத்திரத்தை சேர்ந்த டேனியல் (48) ஆகிய 7 பேரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதில் ஆராவமுது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், உதவி வருவாய் அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். அதே போல் மதி(எ)மதியழகன், ஈரோட்டில் ஈமு கோழி விற்பனையில் தண்டனை பெற்றவர் ஆவார். கைதான 7 பேரிடம் இருந்து 13 செல்போன்கள், 62 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி, தர்மபுரி சிறைகளில் அடைத்தனர். ஓசூரில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், அலுவலர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.