திருப்பூர்: பல்லடம் அருகே கடனை தாமதமாக கட்டியதால் வீடுகள் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சயான், வங்கதேசத்தவர் என விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ரூ.15 லட்சம் செலவழித்தும் குடியுரிமை பெறமுடியவில்லை என போலீசாரிடம் சயான் வாக்குமூலம் அளித்தார். வங்கதேசத்தைச் சேர்ந்த சயான் சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேல் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றிய கீதாவை திருமணம் செய்தபின் ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் சயானை போலீசார் கைது செய்தனர். பல்லடம் கரைப்புதூரில் தாமதமாக கடனை கட்டியதால் சயானின் 7 வீடுகளுக்கு நிதிநிறுவனத்தினர் பூட்டு போட்டு மின்இணைப்பை துண்டித்தனர். கரைப்புதூர் எம்.ஏ நகரில் சயன் என்பவர் தனது வீட்டை விரிவாக்கம் செய்ய ரூ.43 லட்சம் கடன் பெற்றிருந்தார். சயான் வீடு, அவர் வாடகைக்கு விட்டிருந்த 6 வீடுகள் என ஏழு வீடுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். நிதி நிறுவன ஊழியர்கள் அட்டூழியத்தால் தங்க இடம் இன்றி நடுத்தெருவில் 7 குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.