கிருஷ்ணகிரி : தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பேரவையில் தாக்கல் செய்யப்பட் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளுடன் ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட் அறிவிப்பின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 400 கோடியில் டைடல் பார்க் அமைக்க டெண்டர் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை, வரைப்படம் தயார் செய்யும் பணிகள் மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிட்டுள்ளது. 5 லட்சம் சதுர அடி பரப்பில் உயர்தர அலுவலக வசதிகளை கொண்ட வகையில் இந்த டைடல் பூங்கா அமையும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை மற்றும் டைடல் பூங்காவிற்கான மூன்று மாதிரி வரைபடங்களை சமர்ப்பிக்கும். இதிலிருந்து ஒரு மாதிரியை தமிழக அரசு இறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.