சென்னை: இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது,
தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை “Local Language” என்று சுருக்குவது எனும் பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆக்ரோஷமாக வந்தாலும் – அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள் , இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.