Thursday, June 19, 2025
Home செய்திகள்Showinpage இந்தியை கட்டாய மொழியாக்க மாட்டோம் என்பதை எழுத்துப்பூர்வ உத்தரவாக வெளியிடவில்லை என்றால் போராட்டம்: மகாராஷ்டிரா அமைச்சருக்கு பகிரங்க கடிதம்

இந்தியை கட்டாய மொழியாக்க மாட்டோம் என்பதை எழுத்துப்பூர்வ உத்தரவாக வெளியிடவில்லை என்றால் போராட்டம்: மகாராஷ்டிரா அமைச்சருக்கு பகிரங்க கடிதம்

by Arun Kumar

மும்பை: கடந்த இரண்டு மாதங்களாக, மகாராஷ்டிராவில் முதல் வகுப்பு முதல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழிகளை (மராத்தி, ஆங்கிலம், இந்தி) கட்டாயமாக்குவது குறித்து பிரச்னை நீடித்து வருகிறது. கடந்தாண்டு மாநில பள்ளி பாடத்திட்டத் திட்டத்தின்படி, இந்தி மூன்றாவது கட்டாய மொழியாக அறிவிக்கப்பட்டது. இதற்காக இந்தி பாடப்புத்தகங்கள் அச்சிடப்படத் தொடங்கின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில் கட்சி குரல் எழுப்பியது. மாநில அரசின் மும்மொழி திட்டம், இந்தி மொழி திணிப்பு போன்றவை பொது மக்களிடையே கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த எதிர்ப்பின் விளைவாக, மகாராஷ்டிரா மாநில அரசு விடுத்த அறிக்கையில், இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாக அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்தது. ஆனால், இந்த முடிவை உறுதிப்படுத்தும் எழுத்துப்பூர்வ உத்தரவு வெளியிடப்படவில்லை என்பதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிர மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதாஜி புஸ்ஸேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘முதல் வகுப்பு முதல் மராத்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்று எழுத்துப்பூர்வ உத்தரவு உடனடியாக வெளியிட வேண்டும்.
இந்தி கட்டாய மூன்றாவது மொழியாக இருக்கக் கூடாது. இந்தி பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டிருப்பதாகவும், அரசு தனது முடிவை மாற்ற முயல்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

மற்ற மாநிலங்கள் தங்கள் மொழி அடையாளத்தைப் பாதுகாக்க இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதைப் போல, மகாராஷ்டிராவும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே கற்பிக்க வேண்டும். இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாக அமல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், எங்களது கட்சி ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கும். இந்தப் போராட்டங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi