சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்பு, வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞருக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாகா இருப்பேன். திமுக அரசுக்கு எதிராக எந்த பிரச்சனையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை, பேசவும் மாட்டேன். இந்துத்துவ, சனாதன சக்திகள் பாஜகவின் குடை நிழலில் இருந்து கொண்டு தமிழகத்தை திராவிட இயக்கத்தை தகர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இமயமலையை கூட அசைத்து விடலாம், ஆனால் திராவிட இயக்கத்தை தமிழகத்தில் இருந்து யாராலும் அசைக்க முடியாது.
வாஜ்பாய், அத்வானி ஆகியோர் என்னை கேபினட் அமைச்சராக்குகிறோம் என்று சொன்னபோது, நான் முடியாது என்று சொன்னேன். என்னை பொறுத்தவரை கொள்கை என்றால் அதில் உறுதியாக இருப்பேன். திமுக தனிப்பெரும்பான்மையுடன் 2026 தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். எந்த கூட்டணி கட்சி எம்எல்க்களின் ஓட்டு இல்லாமல், திமுக எம்எல்ஏக்களே ஓட்டு போட்டு முதல்வரை தேர்ந்தெடுக்கும் வகையில் திமுக வெற்றி பெறும். எங்களை பொறுத்தவரையில் கூட்டணி அரசு என்ற நோக்கம் இல்லை. அதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.