சென்னை: கலைமகள் சபா என்ற நிதி நிறுவனம் சுமார் 5 லட்சம் பேரிடம் முதலீடுகளை பெற்று தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்தது. இந்த நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து நிறுவனத்தின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிதி நிறுவன சொத்துக்களை நிர்வகிக்க உயர் நீதிமன்றம் நிர்வாகிகளை நியமித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதலீட்டாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இதுநாள் வரை இந்த சபா பெயரில் உள்ள சொத்துக்களையே அடையாளம் காணாமல் உள்ளது என்றனர். விசாரணையின்போது, கலைமகள் சபாவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சொத்துக்கள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 33 மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு சொத்துக்கள் உள்ளன என்று பதிவுத்துறை ஐ.ஜி. கூறினார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், கலைமகள் சபாவில் முதலீடு செய்த சுமார் 6 லட்சம் பேர் பல ஆண்டுகளாக பணத்துக்காக காத்திருக்கின்றனர். சுமார் 3 ஆயிரத்து 88 சொத்துக்கள் இந்த சபாவுக்கு உள்ளன. இதுவரை இந்த சொத்துக்கள் அடையாளம் காணப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் உள்ள சொத்துக்களின் அடையாளம் காணும் பொறுப்பை 33 மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்கிறோம். இதற்காக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 33 மாவட்ட கலெக்டர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். கலைமகள் சபா பெயரில் உள்ள சொத்து விவரங்களை இந்த கலெக்டர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி., ஒப்படைக்க வேண்டும். ஆவணங்களை பெற்றுக் கொண்டு சொத்துக்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அளவீடு செய்து அறிக்கை தருவதற்காக தாசில்தார் ஒருவரை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் நியமித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.